போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிய பொன்விழா மாநாடு
போக்குவரத்து துறை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வலியுறுத்தி வரும் 28ஆம் தேதி மாநிலம் முழுவதும் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பின் மாநில சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.
சேலத்தில் இன்று தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பு மாநில மையத்தின், பொன்விழா மாநாடு நடைபெற்றது.
இந்த மாநாட்டிற்கு தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பின் மாநில தலைவர் விஜய குருசாமி தலைமை வகித்தார் .
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தின் மாநில தலைவர் பி கே சிவகுமார் தொடக்க உரை ஆற்றினார் .
மாநாட்டில் நிறைவு உரை ஆற்றிய தமிழ்நாடு போக்குவரத்து துறை பணியாளர் ஒன்றிப்பின் மாநில சிறப்பு தலைவர் கு. பாலசுப்பிரமணியன் , போக்குவரத்து துறை பணியாளர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் கோரிக்கைகளை வென்றெடுக்கும் வரை பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு அரசின் கவனத்தில் ஈர்க்க வேண்டும்' என்று வலியுறுத்தினார்.
மாநாட்டின் இறுதியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த பாலசுப்பிரமணியன் , தேர்தல் வாக்குறுதியில் கூறியது போல் திமுக அரசு போக்குவரத்து துறை பணியாளர்களின் காலியாக உள்ள வட்டாரப் போக்குவரத்து அலுவலர் உள்ளிட்ட அனைத்து பணியிடங்களையும் துரிதமாக நிரப்பிட வேண்டும் என்பது உள்ளிட்ட 25 அம்ச கோரிக்கைகளை உடனே நிறைவேற்ற வேண்டும் .இல்லை என்றால் விரைவில் திருச்சியில் மாநிலம் தழுவிய மாபெரும் உண்ணாவிரதப் போராட்டம் நடத்தப்படும் அதேபோல வரும் 28ஆம் தேதி அரசு போக்குவரத்து கழக பணியாளர்கள் மற்றும் அனைத்து அரசு ஊழியர்களின் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி மாநிலம் தழுவிய அளவில் ஒரு நாள் அடையாள வேலை நிறுத்த போராட்டம் நடைபெறும் என்று தெரிவித்தார்.
இந்த பொன்விழா மாநாட்டில் மாநிலத்தின் அனைத்து மாவட்டங்களிலிருந்தும் தமிழ்நாடு அரசு போக்குவரத்து துறை பணியாளர்கள் நூற்றுக்கு மேற்பட்டோர் கலந்து கொண்டனர்.
What's Your Reaction?



